கரூர் மாவட்டம், மாயனூர் கதவணை காவிரி ஆற்றின் அருகே 300 மீனவக் குடும்பங்கள் ஆற்றில் மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். கடைகளில் வாங்கும் மீன்களை விட, ஆற்றில் இருந்து நேரடியாக விற்கப்படும் மீன்கள் ருசி மிக்கவை என்பதால், ஆற்று மீன்களை வாங்க கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் அதிகமாக வருவது வழக்கம்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் கடந்த 60 நாட்களாக மீன் பிடிக்காமல் இருந்த மீனவ குடும்பங்கள் மீண்டும் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். அதிகமாக கெண்டை, ஜிலேபி, ராட்டு உள்ளிட்ட மீன்களைப் பிடித்து, ஆற்றின் கரையில் வைத்து விற்பனை செய்தனர்.
அப்போது ஆற்று மீன்களை வாங்க, மாயனூர் கதவணை அருகே அதிக அளவு அசைவப் பிரியர்கள் குவிந்தனர். மேலும் 60 நாட்களுக்குப் பிறகு மீன் பிடிப்பதால், மீன்களின் விலையை மீனவர்கள் ஏற்றி விற்பனை செய்தனர்.
ஊரடங்கில் விலையேறிய மீன்கள்:
கிலோ ஒன்றுக்கு ரூ.150க்கு விற்கக்கூடிய ஜிலேபி மீன்கள் ரூ.250-க்கும், ரூ.300க்கு விற்கக்கூடிய ராட்டு மீன்கள் ரூ.600-க்கும், 100 ரூபாய்க்கு விற்கக் கூடிய கெண்டை மீன்கள், 200 ரூபாய்க்கும் விற்பனை ஆகின.
மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும் அசைவப் பிரியர்கள் மீன்களை வாங்க தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசங்கள் அணியாமலும் மீன்களை வாங்கிச் சென்றனர். இதனை அருகே உள்ள மாயனூர் காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: 'உழவர் சந்தைகள் நாளை முதல் பழைய இடத்திலேயே இயங்கும்' - ஈரோடு மாநகராட்சி