கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (48) கரூர் நோக்கி தனது டெம்போவில் சென்று கொண்டிருந்தார். அவரது வாகனத்தின் பின்னே ராமநாதன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இதற்கு பின்னே கல்லூரி மாணவர்கள் 4 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, வானவிழி பிரிவு அருகே எதிரே வந்து கொண்டிருந்த லாரி, எதிர்பாராத விதமாக டெம்போ, இருசக்கர வாகனம், கார் ஆகியவை மீது ஒன்றன் பின் ஒன்றாக மோதியது. இந்த விபத்தில் இருசக்கரவாகனத்தை ஓட்டி சென்றவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். டெம்போவை ஓட்டிவந்த செந்தில்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் காரில் பயணித்த தினேஷ்(32), பிருந்தா(30), சீனிவாசன்(40), ராஜேந்திரன் (37) மற்றும் லாரி ஓட்டுனர் துரைசாமி(35) ஆகிய ஐவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து க.பரமத்தி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.