கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், பூத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி கேரளா மாநிலம், கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 5 விசைப்படகுகளில் 61 மீனவர்கள் அடங்கிய குழுவினர் ஆழ்கடலில் மீன் பிடிக்கக்சென்றபோது எல்கை தாண்டியதாகக்கூறி, சீலிஸ் நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவ அமைப்புகளின் முயற்சியால் இந்திய தூதரகங்கள் உதவியுடன் கடந்த மாதம் 56 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு சொந்த ஊரான குமரி மாவட்டம் வந்து சேர்ந்தனர். 5 விசைப்படகுகள் மற்றும் அந்த படகுகளின் கேப்டன்கள் 5 நபர்களை விடுவிக்கவில்லை. எனவே, மீனவ அமைப்புகளின் தொடர் முயற்சி மற்றும் இந்தியத் தூதரகங்கள் உதவியுடன் 6 மாதங்களுக்குப்பின் படகு கேப்டன்களை நேற்று(ஜூன் 9) விடுவித்து சொந்த ஊர் வந்தடைந்தனர்.
இந்தநிலையில் நேற்று நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த ஒன்றிய ரயில்வே துறை இணை அமைச்சர் தன்வே ராவ்சாஹேப் தாதாராவினை மீனவர்கள் சந்தித்து தங்களது விசைப்படகுகளையும் மீட்டுத்தருமாறு கோரிக்கை வைத்தனர்.
ஒரு விசைப்படகு 60 லட்சம் ரூபாய் மதிப்பீடு என்றும்; அப்படி 5 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன என்றும்; அந்த படகுகள் தான் தங்களின் வாழ்வாதாரம் எனவும் கூறி அதனை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தல் விறுவிறுப்பு... கர்நாடகாவில் திருப்பம்...