தூத்துக்குடியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. இரண்டு கட்டமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதில், "மூன்றாயிரத்து 537 இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தப் பதவியிடங்களுக்கு மொத்தம் ஒன்பதாயிரத்து 807 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனையில் 135 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
903 பேர் வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1007 பணியிடங்களுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 28 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு 978 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்டமாக ஏழு ஒன்றியங்களுக்கு நடத்தப்படுகின்றது.
இந்த ஏழு ஒன்றியங்களுக்கான வாக்குச்சீட்டு, வாக்காளர் பட்டியல் அச்சடிக்கும் பணி 22ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும். இரண்டாம் கட்டமாக 30ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் பணி 24ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு அந்தந்தப் பகுதிகளுக்கு பிரித்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 374 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் 33 விழுக்காடு என்ற அடிப்படையில் வீடியோ கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும். இடைத்தேர்தலுக்குப் பின்பற்றப்பட்ட வாக்காளர் பட்டியல் உள்ளாட்சித் தேர்தலில் பின்பற்றப்படும். கூடுதலான வாக்காளர்கள் சேர்ப்பதற்கான அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'குழந்தைப் பாக்கியம் வேணுமா... நாங்க இருக்கோம்' - நூதன மோசடியில் போலி மருத்துவர்!