கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் பி.எட். பட்டப்படிப்பை முடித்த 25 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் 15 மாணவ மாணவிகளுக்கு தனி வகுப்புகளை (டியூஷன்) எடுத்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (அக். 24) அந்தப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டினருகிலுள்ள பதினாறு வயது மாணவர் ஒருவர் அந்தப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்தப்பெண் சத்தம் போடவே, 'உன்னை உயிரோடு விட்டால் நான் உன்னிடம் தவறாக நடக்க முயன்றதை வெளியே சொல்லிவிடுவாய்' என்றுகூறி தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து அந்தப்பெண்ணின் தலையிலும் அடிவயிற்றுப்பகுதியிலும் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
வலியால் அலறித்துடித்த பெண்ணின் சத்தத்தைக்கேட்டு அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தப்பியோடிய மாணவனை கைது செய்த காவலர்கள், அவர் மீது வழக்குப் பதிவு செய்து தற்போது சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.
இந்தச்சூழலில் மாணவன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிய வேண்டுமென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த காவலர்கள் 'ஏற்கனவே மாணவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்துவிட்டோம்' என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
இதன்பின்னர் மாணவன்மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கு குறித்த ஆவணங்களை காவலர்கள் வாசித்துக் காண்பித்ததையடுத்து அவர்கள் போரட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: மதுரை விமான நிலையத்தில் 350 கிராம் தங்கம் பறிமுதல்!