கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மாநகரத்துக்கு குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை அமைந்துள்ளது. 25 அடி உயரம் கொண்ட முக்கடல் அணையிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் மூலம் வடசேரி அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டுவந்து சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் நாகர்கோவில் பொது மக்களுக்கு குடிநீர் தேவைக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், முக்கடல் அணை பகுதியில் இரவு பணியில் இருந்த ஊழியர்கள் சிலர் அப்பகுதியில் ஒரு சிறுத்தை எதையோ சாப்பிட்டபடி படுத்திருப்பதை பார்த்துள்ளனர். அப்போது, இதைக் கண்ட ஒருவர் தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை வனத்தின் மேல் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட முயன்றனர். எனினும் சிறுத்தையை காண முடியவில்லை. இப்பகுதியில் இதுவரை பகல் நேரத்தில் சிறுத்தையை கண்டதில்லை என்றும், முதல்முறையாக இரவு நேரத்தில் சிறுத்தையை பாதத்ததாகவும் அது வயதான சிறுத்தை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முக்கடல் அணை பகுதியில் திடீரென சிறுத்தை நடமாட்டத்தை அறிந்து அப்பகுதி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
வன்கொடுமைக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட சிறுமி - காவல் துறை விசாரணை