தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் என்பவர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். அவர் அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காக அதன் சங்கத்தின் சார்பில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களை முன் நின்று நடத்திவந்தார்.
இதனையடுத்து அவர் கடந்த மே மாதத்துடன் பணி நிறைவு பெறுவதாக இருந்த சூழலில் அவர் ஓய்வு பெறும் நாளான மே 31ஆம் தேதி தமிழ்நாடு அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவருக்கு வழங்கப்பட வேண்டிய பண பலன்கள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கை அவரை பழிவாங்கும் நோக்கத்தில் அரங்கேற்றப்பட்டது என சக அலுவலர்கள் கூறுகின்றனர்.
அரசின் இச்செயலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர் சங்கங்கள் அவரது தற்காலிக பணி நீக்கத்தை ரத்துசெய்து அவருக்கு ஓய்வுக்கான அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும் என்று போராடிவருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணி ஏதும் செய்யாமல் அலுவலகத்திற்கு உள்ளேயே அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தால் இந்த அலுவலகத்தில் பணி ஏதும் நடைபெறாமல் அனைத்து பணிகளும் முடங்கின. இதனால் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று திருமண நிதி உதவித் தொகை, பசுமை வீடு திட்டம் போன்ற மக்கள் சார்ந்த திட்டங்களுக்காக மனு கொடுக்க வந்த பொதுமக்கள் திரும்ப சென்றனர்.