கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட ஆழ்கடல் மீன்பிடிப்பு சங்கம் சார்பில், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் புகார் மனு ஒன்று வழங்கியுள்ளது. அந்த புகார் மனுவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 68 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 44 கடலோர கிராமங்கள் உள்ளதாகவும், இந்த 44 கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் மீன்பிடிப்பதை வாழ்வாதாரமாக கொண்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பொது பணி துறையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பரக்காணி என்ற இடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கடலோர ஒழுங்குமுறை ஆணையம் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்றும், எந்த ஒரு விதிமுறைகளையும் பின்பற்றாமல், பொதுப்பணி துறையினர் இந்த தடுப்பணையை கட்டி வருவதாக தெரிவித்துள்ளனர்.
கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் உரிய அனுமதி வாங்காமலும், எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளாமலும் இந்த தடுப்பணையை துறைமுக பகுதியில் கட்டி வருவதாகவும், இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், பொது பணித்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் இந்த தடுப்பணை கட்டுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் உரிய அனுமதி வாங்கி தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. எனவே கடலோர ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு இதற்கு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளனர்.
பொதுப்பணித் துறைக்கு தடை: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய பசுமை மண்டல தீர்ப்பாய அமர்வு, தடுப்பணை கட்டும் நடவடிக்கையை உடனடியாக பொது பணித்துறை நிறுத்த வேண்டும் என்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். அதனை இடிக்க உத்தரவிட முடியாது ஏனென்றால் அதனால் பொது மக்கள் வரிபணம் வீணாகும் எனவே தமிழ்நாடு அரசு கடலோர ஒழுங்கு முறை மண்டலத்தின் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக கடலோர ஒழுங்கு முறை மண்டலத்திற்கு மனுதாரர் தரப்பில் மனு அளித்திருந்தால் உரிய முறையில் சட்டத்திற்கு உட்பட்டு அதனை ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த கூடிய பொது பணித்துறை அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவிடம் தடுப்பணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான அறிக்கை பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள ஆற்றுப்படுகையில் எந்த ஒரு ஆக்கிரமிப்புகளும் இல்லாமல் பொது பணித்துறை பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆக்கிரமிப்பு இருந்தால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:சாலையில் சாக்கடை கழிவுகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு