வைணவத் திருத்தலங்களில் வடகலை அல்லது தென்கலை பிரிவினர் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இருதரப்பினர் மத்தியில் அவ்வப்போது, மோதல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராகவும், வரதராஜ பெருமாள் கோயில் செயல் அலுவலருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.
அந்த வழக்கில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை மற்றும் தென்கலை அர்ச்சகர்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருவதாகவும்; இதனால் கோயில் விழாக்கள் பூஜைகள் சுமுகமாக நடைபெறுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதனால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கெனவே இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 1915 மற்றும் 1969 ஆகிய ஆண்டுகளில் தென்கலை பிரிவினர் முதலில் பிரபந்தம் பாடவும் மந்திரங்களை பூஜை செய்யவும், அதன் பிறகு வடகலை பிரிவினர் பிரபந்தம் பாட வேண்டும் என்றும் பிறப்பித்த உத்தரவுகளை உரிய முறையில் கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
1915ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் வடகலை பிரிவினை பிரபந்தம் படுவதை தென்கலை பிரிவினர் தடுக்கக் கூடாது எனவும்; வழிபாட்டுக்கு மட்டுமே மந்திரங்கள் ஓதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு நடைபெற்றது.
அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வடகலை, தென்கலை பிரச்னை நீண்டநாள் பிரச்னையாக இருப்பதால், கோயில் விழாக்கள் மற்றும் பூஜைகளை சுமுகமாக நடத்த முடிவதில்லை என்று தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'நீண்ட நாள்களாக நீடித்து வரும் இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த உத்தரவுகளை பிறப்பிக்கிறேன். வரதராஜ பெருமாள் கோயில் செயல் அதிகாரி, முதலில் தென்கலை பிரிவினரை ஸ்ரீசைல தயா பத்ரம் முதல் இரண்டு வரிகளைப் பாட அனுமதிக்க வேண்டும். பின்னர் வடகலை பிரிவினர் ஸ்ரீராமானுஜ தயாபத்ரம் முதல் இரண்டு வரிகளைப் பாட வைக்க வேண்டும். பின்னர் இரண்டு பிரிவினரும் சேர்ந்து பாட வேண்டும். பிரபந்தம் பாடிய பிறகு மணவாள மாமுனிகள் வாலித்திருநாமம், பின்னர் தேசிகன் வாலித் திருநாமம் பாடி முடிக்க வேண்டும்.
உயர் நீதிமன்ற உத்தரவை தென்கலை, வடகலைப் பிரிவினர் மதித்து செயல்படவில்லை அல்லது பிரபந்தம் பாடவில்லை என்றால், பிரபந்தம் பாட முன் வருபவர்களை செயல் அதிகாரி அனுமதிக்க வேண்டும்.
விழா காலங்களில் வடகலை, தென்கலைப் பிரிவினரால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், செயல் அலுவலர் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும். அந்தப் புகாரை பெற்று குற்றச் செயலில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் செயல் அலுவலர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த உத்தரவை செயல்படுத்தாத நபர்களுக்கு எதிராக வரதராஜ பெருமாள் கோயில் செயல் அலுவலர் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயரைக் குறிப்பிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தெடர வேண்டும். இந்த உத்தரவு மார்ச் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்' எனவும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்ட அலுவலர்கள் பாலியல் புகாரில் சிக்கினால் கட்டாய ஓய்வு!