தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த உலமாக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று (பிப்.2) காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜக பிரமுகர் கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு ஒன்றினை அளித்தனர்.
அப்புகார் மனுவில், “தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை திட்டமிட்டு சீர்கெடுக்கும் விதத்திலும் அமைதியை சீர்குலைக்கும் விதத்திலும் நாங்கள் எங்கள் உயிரை விட மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை மிகவும் கேவலமாகவும் கேலியாகவும் பாஜக பிரமுகர் கல்யாண ராமன் பேசியுள்ளார்.
தொடர்ந்து பல இடங்களிலும் அவதூறாக பேசிவரும் பாஜக பிரமுகர் கல்யாணராமனை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற தீய நிகழ்வுகள் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் நிகழாமல் தடுக்குமாறும் தமிழ்நாடு அரசையும் காவல் துறையையும் கேட்டுக்கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.