ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில் ஸ்ரீபெரும்புதூர் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் நாள்தோறும் மருத்துவம் பெற்றுவருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சுங்குவார்சத்திரம் அடுத்த செல்லம்பட்டிடைப் பகுதியைச் சேர்ந்த தீபலட்சுமி (35) ஆய்வக உதவியாளராகப் பணியாற்றிவருகிறார். இவர் கரோனா பரிசோதனைக்காக வருபவர்களுக்குப் பரிசோதனை மேற்கொண்டுவந்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளவரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட ஆய்வக உதவியாளர் தீபலட்சுமிக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு தற்போது மருத்துவம் பெற்றுவருகிறார்.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் தற்போது ஆய்வக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதால் கரோனா பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பரிசோதனைக்காக வரும் நோயாளிகள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் பெரும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.
எனவே ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக ஆய்வக உதவியாளரை நியமிக்க மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் இரவு நேர லாக்டவுன்: ஆளுநர் தமிழிசை அறிவிப்பு