MGR Memorial Day: பாரத ரத்னா எம்ஜிஆரின் 34ஆவது நினைவுநாள் தமிழ்நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டம் முதல் கிளைக்கழகம் வரை எம்ஜிஆரின் படத்திற்கும், உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான வி. சோமசுந்தரம் தலைமையில் முதலில் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் ஒன்றியச் செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் பொதுமக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், பூக்கடை சத்திரம், பெரியார் தூண், தேரடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மலர்களால் அலங்கரித்துவைக்கப்பட்டுள்ள எம்ஜிஆரின் உருவப்படத்திற்கும், வாலாஜாபாத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவச் சிலைக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மாநில எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஆர். சத்யா, மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம், மாவட்ட, ஒன்றிய, நகர முன்னனி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டு எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதையும் படிங்க:இறப்பிலும் எம்ஜிஆருடன் என்ன ஒரு ஒற்றுமை! 'நாளை நமதே' இயக்குநர் காலமானார்