இந்தியாவில், கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5, 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 166 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 473 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் வருகின்ற 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், சமய மாநாட்டுக்கு சென்றுவிட்டு சத்தியமங்கலம் வந்த மூன்று பேரும், கெம்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஒருவரும் பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்தியமங்கலத்தில் ஒரு பகுதி சீல் வைக்கப்பட்டு, 6,100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கெம்பநாயக்கன் பாளையத்திலும் 600 பேர் வசிக்கும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டு மூன்று வார்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
ஆனால், நோய்த் தொற்று பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் சத்தியமங்கலம் அடுத்த அங்கணகவுண்டன்புதூரில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினர். இதில், மூன்று முதல் ஐந்து நபர்கள் வரை ஒன்றாக அமர்ந்து கிரிக்கெட்டை ரசித்தனர். இவர்கள் யாரும் தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியத்தோடு விளையாட்டை ரசிப்பதில் கவனம் செலுத்தினர்.
கிரிக்கெட் விளையாடுவதை படம்பிடித்தபோது இளைஞர்கள் முகத்தை மூடியபடி அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் சிலர் படம் பிடிப்பதையும் கண்டுகொள்ளாமல் ஒன்றாக அமர்ந்திருந்தனர். கரோனா வைரஸ் தொற்றின் அபாயம் தெரியாமல் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதத்தில் நடத்த முடிவு?