ஈரோடு: சத்தியமங்கலத்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதி சமவெளி, மலைப்பகுதிகளை உள்ளடக்கியதாகும். தமிழ்நாட்டில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனத் துறை சார்பில் பல்வேறு சுற்றுலாப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்கு திம்பம் மலை உச்சியில் 19ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே காட்சிமுனை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பைனாகுலர் உதவியுடன் பரந்து விரிந்துகிடக்கும் வனப்பகுதி, மலை முகடுகள், பண்ணாரி அம்மன் கோயில், பவானிசாகர் அணை நீர்த்தேக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு ரசிக்கும் வகையில் காட்சிமுனை கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
அதேபோல தலமலையில் திப்புசுல்தால் காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள், அரண்மனை, குளங்கள், காட்சிமுனை கோபுரங்கள் உள்ளன.
பண்ணாரியில் வன உயிரியில் பூங்காவும் அமைக்கப்பட்டு வனவிலங்குகள், இயற்கை குறித்த பார்வையாளர்கள் அறியும் வகையில் யானை, புலி, சிறுத்தை, மான் போன்ற விலங்குகள் காட்சிப்படுத்தப்பட்டன.
ஆண்டுதோறும் வனத் துறையின் சார்பில் வனச் சுற்றுலா ஏற்பாடுசெய்து இயற்கை அழகை ரசித்துவந்தனர். தற்போது கரோனாவால் இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்ட காட்சிமுனை கோபுரங்களில் பார்த்து ரசிக்க அனுமதிக்க மீண்டும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.