புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் சின்ன வெங்காயம், விதை வெங்காயம் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.
வெங்காய விலை குறைவு
விதை வெங்காயத்தை வாங்க தாளவாடி மலைப்பகுதி, கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான உழவர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் இன்று (ஏப். 29) புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு 800-க்கும் மேற்பட்ட விதை வெங்காயம் மூட்டைகளை வியாபாரிகள், உழவர்கள் விற்பனைக்குக் கொண்டுவந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், கர்நாடக மாநிலத்திலிருந்து வியாபாரிகள், உழவர்கள் இன்று (ஏப். 29) கூடிய சந்தைக்கு வரவில்லை. கடந்த இரண்டு வாரங்களாக கிலோ 80 ரூபாய்க்கு விற்ற விதை வெங்காயம் இன்று விலை குறைந்து, கிலோ 35 முதல் 45 ரூபாய்வரை விற்பனையானது.
வழக்கமாக சந்தைக்குக் கொண்டுவரப்படும் 800 மூட்டைகள் விற்பனையாகும் நிலையில், இன்று சந்தைக்கு கர்நாடக வியாபாரிகள், உழவர்கள் வராததால் 400 விதை வெங்காய மூட்டைகள் மட்டுமே விற்பனையானது. மீதமுள்ள 400 விதை வெங்காய மூட்டைகள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.