ஈரோடு மாவட்டம், மாமரத்துபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சக்தி மசாலா நிறுவனம் சார்பில், கரோனா நிவாரண நிதியாக ஐந்து கோடி ரூபாய் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஈரோட்டில் உள்ள சக்தி மசாலா நிறுவனம், பல்வேறு சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
கரோனா முதல் அலை வந்த கடந்த ஆண்டும் பல்வேறு நிவாரணப் பணிகளில் முழு மூச்சுடன் செயல்பட்டோம். இந்த ஆண்டும் சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு கரோனா நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கரோனா பேரிடரை எதிர்கொள்ள அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி, சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ஐந்து கோடி ரூபாய் நிவாரண நிதி தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மே 15ஆம் தேதி வங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து முதலமைச்சருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்கள்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையின் கீழ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சுகாதாரம், வருவாய்த் துறை, காவல் துறை, உணவு வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, தீயணைப்புத் துறை, மாநில பேரிடர் மேலாண்மை துறை, உள்ளாட்சித் துறை, அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், களப்பணியாற்றி வரும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக ஓய்வின்றி சிறப்பாக பணிபுரிந்து வருவதற்கு, சக்தி மசாலா நிறுவனம் வணக்கத்தையும் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிவாரண நிதி அளித்தது குறித்து பேசியுள்ள அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் பி.சி துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர், கூடிய விரைவில் கரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, பொது மக்கள் அனைவரும் நலமுடன் வாழ, சக்தி மசாலா நிறுவனம் இறைவனை வணங்கி வேண்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'என்னையும் கைது செய்யுங்கள்': போஸ்டர் விவகாரத்தில் சவால்விடும் ராகுல்!