ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பெரியகள்ளிப்பட்டியில் உள்ள முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வன். இவர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளைப் பராமரித்து வருகிறார். இவர் தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சிறுத்தை திடீரென ஆடுகளை கடித்துக் கொன்றது.
அப்போது, ஆடுகள் கூச்சலிடுவதைக் கேட்டு செல்வன் சம்பவ இடத்திற்குச் சென்றார். அப்போது, அங்கு சிறுத்தை பதுங்கியிருப்பதைக் கண்டு கிராம மக்களுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, இப்பகுதியில் சிறுத்தை, ஆடுகளை கடித்துக் கொல்வதால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் இறந்த ஆறு ஆடுகளுடன் பெரியகள்ளிப்பட்டி சோதனைச் சாவடி வந்தனர்.
அங்கு சாலையின் குறுக்கே இறந்த 6 ஆடுகளையும் வைத்து ஆட்டுக்கு இழப்பீடு வழங்கக்கோரி, 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த ஜீரஹள்ளி வனச்சரக அலுவலர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தார்.
பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சமூக வலைதளத்தில் காவல் துறையினரை திட்டிய அஜித் ரசிகர் கைது