தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவக்குமார் ஈரோட்டில் உள்ள கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறை, அரசு கேபிள் டிவி தாசில்தார் அலுவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "ஈரோடு மாவட்டத்தில் சுமார் 93 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் பயன்பாட்டில் இருந்த நிலையில் சுமார் 23 செட்டாப் பாக்ஸ்கள் தற்பொழுது பயன்பாட்டில் இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்று பயன்பாட்டில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களுக்கு ஆப்பரேட்டர்களும் அலுவலர்களுமே பொறுப்பு. அரசிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ள செட்டப்பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்கவில்லையென்றால், செட்டாப் பாக்ஸ்களுக்கான விலை வசூலிக்கப்படும்.
மேலும் சில ஆப்பரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்காமல் தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்பதாகப் புகார் வந்துள்ளது. அது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.