ஈரோடு:சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக திருப்பூர் செல்லும் பேருந்து வழக்கம்போல், ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில்பேருந்து பயணிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 53 பேர் பயணித்தனர்.
இந்த நிலையில் ஈரோடு திண்டல் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக துடித்துக்கொண்டே இடதுபுறம் சாய்ந்துள்ளார். உடனடியாக திருப்பூர் நோக்கி பயணித்த பயணி ஒருவர் பெரும் விபத்து ஏற்படாவண்ணம் சென்டர் மீடியனில் பேருந்தை பயங்கரமாக மோதச் செய்து விபத்தை தவிர்த்துள்ளார்.
பெரிய விபத்து ஏற்பட இருந்த பேருந்தை இயக்கி பயணிகளைக் காப்பாற்றிய நபரை வெகுவாக மக்கள் பாராட்டினர். மேலும் உடனடியாக பேருந்து ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடம் விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் அங்கு நிலவிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுக்குள் கொண்டுவரச்செய்தார்.
பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ள சாலையில் ஏற்பட்ட இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:திம்பம் மலைப்பகுதியில் செல்லும் வாகனங்கள்- பொதுமக்கள் கருத்து