ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பங்களாப்புதூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பெருமுகை பகுதியை சேர்ந்தவர் சித்தியான். இவருக்கு பம்பாவாசன், சுபிகன் என இரு மகன்கள் உள்ளனர்.
பள்ளி விடுமுறை என்பதால், சிறுவர்கள் இருவரும் வீட்டின் முன்பு விளையாடியுள்ளனர். அப்போது பம்பாவாசன் தன்னை ஏதோ கடித்துவிட்டதாக தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதனால் அச்சத்திற்குள்ளான சித்தியன், சிறுவனை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனை மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து பங்களாப்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.