ஈரோடு: பவானிசாகர் அணை முன்பாகவுள்ள பவானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலம் பழுதடைந்ததால் அதனருகே புதிய பாலம் கட்ட ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதிய பாலம் கட்டுமான பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளதால் அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக அணை பூங்கா முன்புறமுள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளை இடிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பாலம் கட்டுமானப் பணி, சாலை விரிவாக்கப் பணிக்காக கடைகளை இடித்து அகலப்படுத்தும் பணியினை பவானிசாகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பண்ணாரி, முன்னாள் அமைச்சர் கருப்பணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
கடை உரிமையாளர்கள் வேதனை
சாலை விரிவாக்க பணி காரணமாக கடைகள் இடிக்கப்பட்டதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினரிடம் கடைக்காரர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசி, ஆவன செய்யப்படும் என பொதுமக்களிடம் சட்டப்பேரவை உறுப்பினர் பண்ணாரி, முன்னாள் அமைச்சர் கருப்பணன் ஆகியோர் உறுதியளித்தனர்.
இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணி முடிந்தபின் இடிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு அதே பகுதியில் கடைகள் கட்ட இடம் ஒதுக்கப்படும் என பவானிசாகர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் கிருஷ்ணகிரி பயணம் - அறிவிப்பே இல்லாமல் சாலையோர கடைகள் இடிப்பு