ஈரோடு, சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இங்குள்ள யானைகள் தண்ணீர் குடிப்பதற்கு மாயாற்றுப் பகுதிக்கு வந்து, செல்வதால் தெங்குமரஹாடா சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதற்கிடையே, சுஜ்ஜில்குட்டை காப்புக்காட்டுப் பகுதியிலிருந்து வந்த 20 வயதுள்ள ஆண்யானை, குடற்புழு நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல், தெங்குமரஹாடா சாலையில் உள்ள ஊசிப்பள்ளத்தில் கீழே விழுந்தது.
வனச்சாலையின் மத்தியில் யானை விழுந்து உயிருக்குப் போராடி வந்த நிலையில், அவ்வழியாக சென்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பவானிசாகர் வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் யானையைத் தூக்கி நிற்க வைக்க முயன்றனர். ஆனால், யானை நிற்கமுடியாத நிலையில் இருந்தது. இந்நிலையில் சிறிது நேரம் கழித்து யானை உயிரிழந்தது.
அதனைத் தொடர்ந்து யானையின் உடலை ஆய்வு செய்வதற்காக கால்நடை மருத்துவருக்கு, வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். மருத்துவர் அசோகன் தலைமையில் வந்த குழு உயிரிழந்த யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தனர்.
அதன், பிறகு யானையின் உடல் அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. வனத்தில் சேறும் சகதியும் கலந்த தண்ணீர் குடித்ததால் குடற்புழு நோய் ஏற்பட்டு யானை உயிரிழந்ததாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சுற்றுலா பயணிகள் வாகனத்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை