திண்டுக்கல்: கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கேரள மாநிலம், கொல்லம் கவநாடு பகுதியைச்சேர்ந்த பினு என்ற ஆதிநாராயணன் (29) என்ற இளைஞர் பணிக்குச்சேர்ந்துள்ளார்.
தொடர்ந்து அங்கு பணி செய்து வந்த நிலையில் தனியார் தங்கும் விடுதியில் யாரும் இல்லாத இரவு நேரத்தில் விடுதி உரிமையாளர் அறையில் இருந்த 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 செல்போன்கள் ஆகியவற்றைத் திருடிவிட்டு, உரிமையாளரின் காரையும் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டார்.
இதுகுறித்து விடுதி உரிமையாளர் கொடுத்தப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரள இளைஞர் ஆதிநாராயணன், கொடைக்கானல் பகுதியில் மீண்டும் திருட வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆதிநாராயணனை கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில் இதேபோல திருநெல்வேலி பகுதியில் சுற்றுலாப்பயணிகளிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை திருடியதும், கொடைக்கானலில் தனியார் விடுதியில் உரிமையாளரின் 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 செல்போன்கள் மற்றும் காரினை திருடியது தெரியவந்தது.
பின்னர், அவரிடம் இருந்த கார் மற்றும் கேமரா ஆகியவற்றைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயிலில் ஒலிபெருக்கி வைத்ததால் தகராறு... ஒருவர் அடித்துக் கொலை... ஆறு பேர் கைது...!