திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா தொட்டணம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகன் மல்லீஸ்முருகன். இருவரும் கடையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மறைத்துவைத்திருந்த ஆயுதங்களை எடுத்து மல்லீஸ் முருகனையும், கிருஷ்ணனையும் அரிவாளால் வெட்டத் தொடங்கினர்.
அப்போது, மல்லீஸ்முருகன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ஆனால், அவரது தந்தை கிருஷ்ணனை அந்த கும்பல் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதைத் தடுக்கச் சென்ற நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த எரியோடு காவல் துறையினர் கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஏற்கனவே மல்லீஸ் முருகன் மீது கொலை வழக்கு உள்ளதால் அவரது எதிரிகள் யாரேனும் வெட்டி உள்ளார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தென்காசியில் ஆட்டோ ஓட்டுநர் படுகொலை!