கொடைக்கானல் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”கொடைக்கானலின் மையப்பகுதியில் இயற்கை தந்த வரமாக ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது முற்றிலும் கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமானதாகும். ஏரி அமைந்துள்ள பகுதியில் 8 சென்ட் பரப்பளவு மட்டும் ஒரு தனியார் கிளப்பிற்கு ஒத்திக்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிளப் 10 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு அப்பகுதியில் படகு இல்லம், கடைகள், கழிப்பறை போன்றவற்றை கட்டி வணிக நோக்கில் செயல்பட்டுவருகின்றன.
மேலும் இந்த படகு இல்லத்திற்கு செப்டம்பர் 1ஆம் தேதியுடன் ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில், சட்ட விரோதமாக தற்போதும் படகு இல்லம் இயக்கப்பட்டுவருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் படகுகளை இயக்குவதன் மூலம் வரும் வருவாய் கொடைக்கானல் நகராட்சிக்கும், மீன்வளத் துறைக்கும் 90:10 என்ற விகிதத்தில் சென்று சேர வேண்டும். ஆனால் இந்த வருவாய் முழுவதும் தற்போது தனியாருக்கு சென்றுவிடுகிறது.
இதேபோல் ஏரி அருகே உள்ள ஒரு தனியார் விடுதி நிர்வாகமும், ஏரியை வணிக நோக்கில் பயன்படுத்தி வருகிறது. இவை அனைத்தையும் தடுத்து இந்த படகு இல்லம் மூலம் வரும் வருவாயை அரசுக்கு கிடைக்கும் வகையில், பொது ஏலம் விட உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் மறு உத்தரவு வரும்வரை கொடைக்கானல் படகு இல்லத்தில் படகு போக்குவரத்துக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று நகராட்சி அலுவலர்கள் காவல் துறையினர் உதவியுடன் ஏரியில் இயங்கி வந்த இரண்டு தனியார் படகு இல்லங்களுக்கு சீல் வைத்தனர். நீதிபதிகளின் தீர்ப்பை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் இனிப்புகள் வழங்கியும் , வெடிகள் வெடித்தும் கொண்டாடினர்.
இதையும் படிங்க:கொடைக்கானல் போட் ஹவுஸை இயக்க தடை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு