திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி காய்கறி சந்தைக்கு எதிரே உள்ள கோட்டை குளம் சாலையில், கடைகள் அமைத்து வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமடைந்ததையடுத்து, கோட்டை குளம் சாலையில் செயல்பட்டுவந்த காந்தி காய்கறி சந்தை, பழனி புறவழிச்சாலைக்கு மாற்றப்பட்டது.
தர்ணா போராட்டம்
இந்நிலையில் தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்து வருவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஒரு சில தளர்வுகள் அறிவித்துள்ளது. இதனையடுத்து காய்கறி சில்லறை வியாபாரிகள், கோட்டை குளம் சாலையில் இன்று (ஜூன்.08) தற்காலிகமாகக் கடைகளை அமைத்து வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள், ‘இங்கு வியாபாரம் செய்யக்கூடாது’ எனத் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சில்லறை வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆணையர் பேச்சு வார்த்தை
இதனையடுத்து வியாபாரிகளுடன் ஆணையர் பாலசுப்பிரமணி பேச்சுவார்த்தை நடத்தி, பேருந்து நிலையம், அண்ணாமலையார் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் சில்லறை காய்கறி வியாபாரம் செய்து கொள்ளுமாறு தெரிவித்தார். இதனையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.