திண்டுக்கல் வனத்துறை அலுவலக கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியனின் உதவியாளராக பணிபுரிந்தவர் குமார். இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு கரூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியிட மாற்றம் பெற்றார்.
இந்நிலையில், திண்டுக்கல் வனத்துறை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆண்டு தணிக்கை ஆய்வின்போது, தனிநபரின் பணி ஓய்வு பணத்தை கையாடல் செய்ததாக குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், மூன்று மாதம் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சிறையிலிருந்து வெளியே வந்த குமார் தனக்கு பணியிடை நீக்க காலத்தில் வழங்கவேண்டிய சம்பளம் இதுவரை வழங்கவில்லை எனக் கூறி திண்டுக்கல் வனத்துறை அலுவலகத்தில் முறையிட்டார். இது குறித்து வனத்துறை அலுவலகத்தில் உரிய பதில் கிடைக்காததால், மதுபோதையில் இருந்த அவர், பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், அவருக்கு 70 விழுக்காட்டுக்கும் மேலாக தீக்காயம் இருந்ததால் உயர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். இருந்தபோதும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த தாடிக்கொம்பு காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.