திண்டுக்கல்: அஜித் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வலிமை' வருகிற 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. படத்திற்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பல இடங்களில் முதல் நாள் டிக்கெட் விற்பனை விற்றுத் தீர்ந்துள்ளது.
திண்டுக்கல்லில் ரவுண்ட் ரோட்டில் உள்ள ராஜேந்திரா திரையரங்கில் வலிமை படம் திரையிடப்பட உள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி அதிகாலை ரசிகர் ஷோ திரையிடப்பட வேண்டும் என அஜித் ரசிகர் மன்றம் சார்பில் திரையரங்கு மேலாளரிடம் கோரிக்கைவைக்கப்பட்டது. அதற்கு மேலாளர் கூடுதல் கட்டணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கு கதவைப் பூட்டி வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சென்ற திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் ரசிகர்களைச் சமாதானம் செய்து அனுப்ப முயன்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'வலிமை' திரையரங்கில் பார்க்க வேண்டிய திரைப்படம் - போனி கபூர்!