தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் குறவன் காலனி பகுதியில் 40 குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து பட்டா வழங்கி சாலை வசதி, அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், அரசு அலுவலர்கள் திடீரென குறவன் காலனி பகுதிக்கு சென்று குடியிருக்கும் வீடுகளை அகற்றிவிட்டு அடுக்க மாடி குடியிருப்பு கட்டி தருவதாகவும், வீடுகளை காலி செய்ய வேண்டும் என கூறி வீடுகளை இடிக்க முயற்சித்துள்ளனா்.
இதையடுத்து, குறவன் காலனி மக்கள் 25 ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகளை இடித்துவிட்டு அடுக்கமாடி கட்டி தரும் திட்டம் எங்களுக்கு வேண்டாம் பட்டா மட்டும் வழங்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், அலுவலர்கள் வீடுகளை அகற்றும் முயற்சியில் ஈடுப்பட்டு வருவதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலரிடம் மனு அளித்தனர்.