தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை அத்தியாவசிய வசதிகள் எதுவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படவில்லை.
இதுகுறித்து அரசியல் கட்சியினர், மாவட்ட அலுவலர்கள் ஆகியோரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைக் கண்டித்து இன்று (அக்.5) ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளி ஒருவருடன் சேர்ந்து பொதுமக்கள் 70க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் ஏரியூர் பேருந்து நிலையத்தில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். உடனே வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், ஏரியூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆறு மாதத்திற்குள் நேதாஜி நகர், அண்ணா நகர் பகுதிகளுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்ததின்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: அரியலூரில் மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்!