தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டி ஊராட்சி கெளாப்பாறை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் நியாய விலைக் கடையில் பொருள்கள் வாங்க அருகில் உள்ள கிராமத்திற்குச் செல்கின்றனர்.
நியாய விலைக் கடையில் பொருள்கள் வாங்கும்போது பட்டியலின மக்களின் சாதி பெயரை கூறி சிலர் எங்களை உரசாதீர்கள், நீங்கள் தொட்டால் தீட்டு என அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் மனவேதனையடைந்த கெளாப்பாறை கிராம மக்கள், தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடும்ப அட்டையுடன் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர்.
அப்போது பேசிய அம்மக்கள், "கெளாப்பாறை கிராமத்திற்கு தனியாக நியாய விலைக் கடை பிரித்து தர வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக் கடையின் மூலம் பொருள்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது பகுதி நேர கடையை ரத்து செய்ததால், மீண்டும் ஒரே கடையில் பொருள்களை வாங்கி வருகிறோம்.
இதனால், இரு வேறு சமூகத்தினரிடையே தேவையற்ற பிரச்னைகள் உருவாகிறது. நாங்கள் வசிக்கும் பகுதியையொட்டிய ஆற்றில் தண்ணீர் வருவதால் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இடுப்பளவு தண்ணீரில் ஆபத்துடன் வேலைக்கு சென்று வருகிறோம் என வேதனையுடன் தெரிவித்தனர்.
பின்பு அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் கெளாப்பாறை கிராமத்தை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் தேர்தல் பரப்புரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது - அமைச்சர் தங்கமணி