நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிற தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்த உடல்களை மருத்துவர்கள் இல்லாமல் துப்புரவு பணியாளர்களே உடல் கூறாய்வு செய்யும் காணொலிக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
இந்த மருத்துவமனையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மேலும் தருமபுரி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விபத்து, கொலை, தற்கொலை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தருமபுரி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் மருத்துவர்கள் இல்லாமலேயே உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் இணைந்து இறந்தவர்களின் உடலை உடற்கூறு ஆய்வு செய்கின்ற காணொளி, சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காணொளியில் மருத்துவர் இல்லாமல் இறந்தவரின் உடலை உதவியாளர், துப்புரவு பணியாளர் என மூன்று பேர் உடற்கூறு ஆய்வு செய்கின்ற காட்சி பதிவாகியுள்ளது.
இது குறித்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாச ராஜு கூறுகையில், “தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இறந்தவர்களின் உடலை, உதவியாளர்கள் உடற்கூறு ஆய்வினை செய்வதாக வந்துள்ள வீடியோவை நானும் பார்த்தேன்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் உடற்கூறு ஆய்வு நடைபெறுவதில்லை. தினமும் உடற்கூறு ஆய்வு செய்வதற்கு மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
உடற்கூறு ஆய்வினை உறுதியாக மருத்துவர்கள் இல்லாமல் செய்யப்படுவதில்லை. அந்த வீடியோ காட்சியில் மருத்துவர்கள் இல்லாதது போல் உதவியாளர்கள், துப்புரவு பணியாளர் மட்டுமே உடற்கூறு ஆய்வு செய்வது போன்று வருகிறது.
ஒருவேளை பணியிலிருந்த மருத்துவரை எடுக்காமல், அவரை வேண்டுமென்றே மறைத்து விட்டு எடுத்திருக்கலாம். இதனுடைய உண்மை தன்மையை அறிவதற்காக உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையின் முடிவிலேயே பணியில் இருந்த மருத்துவர் யார்? முழு விவரம் என்ன என்பது தெரியவரும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : டெல்லி வன்முறை பாதித்த பகுதிகளைப் பார்வையிட காங்கிரஸ் குழு அமைப்பு!