தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் பெரியாம்பட்டி, கெட்டூர் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. கார்த்திகா நேற்று (ஏப். 15) தடுப்பூசி முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
ஆய்வின்போது பேசிய மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. கார்த்திகா, "கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதைத் தவிர வேறு வழியில்லை.
முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாத நிறுவனங்கள், பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தடுப்பூசிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் போடப்படுகிறது.
அரசு அலுவலர்கள், 100 நாள் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு நண்பர்கள், உறவினர்கள், அருகில் உள்ளவர்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு அறிவுரை வழங்க வேண்டும். எந்தவித பக்கவிளைவும் ஏற்படுத்தாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
நமது உயிருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இந்தத் தடுப்பூசி விளங்கும். 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் தங்களையும், தங்கள் குடும்பத்தையும், சமுதாயத்தையும் கரோனா நோயிலிருந்து காத்து கொள்ளலாம்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 8 ஆயிரத்தை நெருங்கிய கரோனா!