கடலூரில் நாம் தமிழர் கட்சியின் மக்களவை வேட்பாளரை அறிமுகப்படுத்தி சீமான் பேசியதாவது, “திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என நான்கு கட்சிகளை விடுத்து ஐந்தாவதாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது. ஆடு மாடுகளைப் பராமரித்து அதன்மூலமே ஆஸ்திரேலியா, பிரேசில், டென்மார்க் போன்ற நாடுகள் உலகளவில் தற்சார்பு மிக்க நாடுகளாக வளர்ந்துள்ளன. உயிர்காக்கும் மருத்துவத்தை ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம்.
தனியார் நடத்தும் பேருந்துகள் லாபத்தை ஈட்டுகின்றன. அரசு பேருந்துகள் மட்டும் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை என நிரூபிக்கப்பட்டதால் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் செல்லாது என அறிவித்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைக்கு யார் பொறுப்பு. நாட்டில் இலவசங்கள் இருக்கும்வரை ஏழைகள் இருப்பார்கள்.
பிரதமர் மோடி தேர்தல் வரும்போதுதான் விவசாயிகளைப் பற்றி சிந்திக்கிறார். உலக நாட்டின் பல நாடுகளுக்கும் சென்றுள்ள பிரதமர், நமது இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் செல்லும் பிரதமர், அந்தந்த மாநிலங்களின் தொப்பி அணிவது, கலாச்சார உடைகளை அணிவது, தலைப்பாகை அணிவது என வேஷம் போடுகிறார். ஒருநாளாவது இஸ்லாமியர்கள் அணியும் தொப்பியை அணிந்தது உண்டா? பாகிஸ்தான் மட்டும்தான் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த அரசியல். பாகிஸ்தான் இல்லை என்றால் பாஜகவுக்கு அரசியலே கிடையாது” என்றார்.