கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எம்ஆர்கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் செராமிக் கம்பெனி நடத்தி வருகிறார். அங்கு ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் அடையாளம் தெரியாத மூவர், தங்களிடம் ஆறு கிலோ தங்க நகைகள் இருப்பதாகவும் அதை வாங்கி கொள்கிறாயா? என கேட்டுள்ளனர். அதற்கு அவர், தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை, கம்பெனி உரிமையாளரிடம் கேட்டுப் பார்ப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து, தனது உரிமையாளரிடம் அவர் கூறியுள்ளார். பின்னர் உரிமையாளர் அசோக்குமார், அடையாளம் தெரியாத மூவரிடம் பணம் கொடுக்க அவர்களை, எஸ்பிஐ பேங்க் அருகே சந்தித்துள்ளார்.
அப்போது, இந்த நகை அசல் தங்கம் தானா என்பது குறித்து பரிசோதித்த அசோக்குமார், அவைகள் போலி என தெரியவந்தது. இதனையடுத்து அசோக்குமார் ரகசியமாக விருத்தாசலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் துணை காவல் ஆய்வாளர் இளங்கோவன், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் போலி நகை கொடுத்த மூவரை சுற்றி வளைத்தனர்.
அப்போது, இருவர் தப்பியோடிய நிலையில் பிடிபட்ட ஒருவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சங்கர்லால்(36) என்பது தெரியவந்தது. மேலும் தப்பியோடிய இருவர், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மோகன், அவரது மகன் நாராயணன் என்று தெரியவந்தது.
இதையடுத்து, விருத்தாசலம் உட்கோட்ட குற்றப் பிரிவு துணை காவல் ஆய்வாளர் குமரேசன் தலைமையிலான குழுவினர், தப்பியோடிய இருவரையும் கொளஞ்சியப்பர் கோயில் பகுதியில் கைது செய்தனர்.