கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் நிர்வாக செயல் அலுவலராக சக்கரவர்த்தி (55) என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தையும் சேர்த்து இவர் கவனித்து வருகிறார். இந்நிலையில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தானூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் தனது உறவினர் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணத்தை வைத்து வடலூர் பகுதியில் 25 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார்.
அந்த நிலத்தை மறுசீரமைப்பு செய்வதற்காக வடலூர் பேரூராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது நிர்வாக செயல் அலுவலராக இருந்த சக்கரவர்த்தி ரூ. 25 ஆயிரம் கொடுத்தால்தான் நிலம் மறுசீரமைப்பு செய்து தரப்படும் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, மோகன்தாஸ் வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து வருவதாக சக்கரவர்த்தியிடம் கூறிவிட்டு, இது குறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கூறிய அறிவுரையின் படி மோகன்தாஸ் இன்று வடலூர் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று சக்கரவர்த்தியிடம் ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த மாவட்ட கண்காணிப்பாளர் மெல்வின் ராஜாசிங், காவல் ஆய்வாளர்கள் திருவெங்கடம், சண்முகம், மாலா ஆகியோர் லஞ்சம் வாங்கிய சக்கரவர்த்தியை கையும் களவுமாகப் பிடித்தனர்.
அப்போது அதிர்ச்சியில் திடீரென சக்கரவர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் மருத்துவரை அழைத்து வந்து சக்கரவர்த்திக்கு சிகிச்சையளித்தனர். அதன்பின் அவர்கள் சக்கரவர்த்தியை கடலூர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்சியர் முன்னிலையில் லஞ்சத்தை திரும்பித் தந்த அலுவலர்!