2017ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பிஞ்சனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர், கிராம மக்கள் கூட்டத்தில் 16 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளார். இதற்கு முன்பணமாக 8 லட்சம் ரூபாய் அவர் அப்போதே வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் அந்த முன் பணம் அப்படியே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கபட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்றுவரும் நிலையில், பிஞ்சனூர் கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஊர் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: நாமக்கல்லில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி 2.75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் - தேர்தல் அலுவலர்கள் விசாரணை!
இதில் ஏற்கனவே போட்டியிட்ட சேகர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுத்து தீர்மானம் போடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞர் கூறுகையில், ஏற்கனவே 2017ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டு தற்போது அதே நடைமுறையை ஊர் மக்கள் பின்பற்றுவதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: 50 லட்சத்திற்கு பஞ்சாயத்து தலைவர் பதவி...நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் புகார்!