கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு. அவரது மகன் (13) இன்று காலை வயலுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றார்.
அப்போது புது ஆதண்டார்கொல்லை கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜ் மகள் மலர்விழி (3) தனது வீட்டுமுன்பு விளையாடி கொண்டு இருந்தார். எதிர்பாராத விதமாக சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சிறுமி மலர்விழி மீது மோதியது.
இதில் சிறிது தூரம் சிறுமி இழுத்துச் செல்லப்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த, மங்கலம் பேட்டை காவல்துறையினர், விரைந்து சென்று விபத்தில் இறந்து போன சிறுமியை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவன், அவரது தந்தை சிவகுரு ஆகியோரை கைது செய்தனர். கைதான சிவகுரு விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல விபத்தை ஏற்படுத்திய சிறுவன் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். அவர் மீது 304/2 கொடுங்குற்றம், அஜாக்கிரதையாக கையாளுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் தகராறு, அடிதடி - ஒருவர் படுகாயம்