கோயம்புத்தூர்: பூமார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் திருமண இடைத்தரகராக இருந்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பால்ராஜ் (60) என்ற முதியவர் அறிமுகமாகி, தனக்கு பெண் வேண்டும் எனக் கேட்டுள்ளார். மேலும், தனக்கு குடும்பம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தங்களுடன் இணைந்து இடைத்தரகராக பணியாற்றுவீர்களாக என முதியவரிடம் கேட்ட நிலையில் அதற்கு பால்ராஜ் ஒப்புகொண்டு பணியாற்றி வந்துள்ளார். தொழில் முறையாக அவருடன் திவ்யா பழகி வந்த நிலையில், திவ்யாவிற்குப் பழக்கமான நபர்களிடம், தனக்கும் திவ்யாவிற்கும் தகாத உறவு இருப்பதாகவும், அவரைத் தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பால்ராஜ் கூறி வந்ததாகத் தெரிகிறது.
இத்தகவலை அறிந்த திவ்யா இது குறித்து பால்ராஜிடம் கேட்டபோது, தன்னைத் திருமணம் செய்துகொள்ள பால்ராஜ் வற்புறுத்தியதாகத் தெரிகிறது.
என்றோ சொன்னது; இன்று சிக்க வைத்தது: இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் மக்களுக்கு உதவி செய்து வருவதாக முன்னரே பால்ராஜ், திவ்யாவிடம் கூறியிருந்த நிலையில் திவ்யா மற்றும் அவரது உறவினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
அங்கிருந்த பால்ராஜின் சட்டையைப் பிடித்து, இழுத்து வந்ததோடு, அவரைத் தாக்கினர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர், அவர்களைத் தடுத்து நிறுத்தியதோடு, பால்ராஜை விசாரணைக்காக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், பால்ராஜ் இடைத்தரகர் எனக் கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாகவும் கூறப்படும் நிலையில் பணம் கொடுத்து ஏமாத்த பெண்களும் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் அவரைத் தாக்க முற்பட்டனர்.
இச்சம்பவத்தால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திருவிழாவில் பிரச்னை - பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட லத்தி சார்ஜ்!