நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்(35). இவருடைய மனைவி திவ்யா (30). இவர்களுக்கு ஆறு வயதில் அபிஷேக் என்ற மகனும், மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே, குடும்பத் தகராறு காரணமாக அருணை பிரிந்து திவ்யா கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியில் வசித்துவந்தார்.
அதன்பிறகு, கோவில்மேட்டில் உள்ள ஒரு மிக்சர் கம்பெனியில் திவ்யா வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான ராஜதுரை (30) என்பவருடன் திவ்யாவுக்கு திருமணத்தை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களது உறவுக்கு திவ்யாவின் மகன் அபிஷேக் இடையூறாக இருந்ததால், அவரை திவ்யா அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அபிஷேக்கிற்கு உடல் நிலை சரியில்லை என ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளனர். பின்னர், அபிஷேக்கின் உடல் முழுக்க காயம் இருந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
![woman with illicit affair arrested for killing son in coimbatore](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-02-murder-arrest-script-7208104_20042020131032_2004f_1587368432_991.jpg)
இதையடுத்து, அபிஷேக்கின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக கொண்டுச் செல்லப்பட்டது. இது தொடர்பாக சாய்பாபா காலனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மாடியில் இருந்து விழுந்து அபிஷேக் உயிரிழந்ததாக காவல்துறையினரிடம் திவ்யா தெரிவித்துள்ளார். சிறுவனின் உடலில் 17 இடங்களில் காயங்கள் இருந்ததும், பிரம்பு, பூரிக்கட்டையால் அடித்ததும் கம்பியால் சூடு வைத்திருந்ததும் திவ்யா மீது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை செய்ததில், தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சிறுவனை அடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து திவ்யா, ராஜதுரை இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்
இதையும் படிங்க... 6 வயது சிறுவன் திடீர் மரணம்: உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம்