கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 24 வீரபாண்டி பகுதியில் தடாகம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது அவ்வழியாக வந்த கார் காவல் துறையினரை கண்டதும் திரும்ப முயன்றுள்ளது. அதிலிருந்து ஒருவர் இறங்கி தப்பி ஓடியுள்ளார். உடனடியாக காவல் துறையினர் காரை மடக்கி காரை ஓட்டி வந்த ஓட்டுனரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஓட்டுநர் பெயர் சுப்பிரமணியன்(28) என்பதும் காரில் இருந்து தப்பி ஓடிய நபர் சதிஷ்குமார் என்பதும் இருவரும் கேரள மாநிலம் கோட்டதுரை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் காரை சோதனை செய்யும்போது 5 பண்டல்களில் தலா 2 கிலோ கஞ்சா என்று மொத்தம் 10 கிலோ கஞ்சா இருந்துள்ளது.
உடனடியாக சுப்ரமணியத்தை கைது செய்த காவல் துறையினர் காரையும் கஞ்சாவையும் பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தேனி மாவட்டம் கடமலைகுண்டு என்னும் பகுதியில் இருந்து கஞ்சா விற்பனைக்காக எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய சதிஷ் குமாரை தேடி வருகின்றனர்.