கோயம்புத்தூர்: கோவை அடுத்த பேரூர் பகுதியை சேர்ந்த பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டு, கல்லூரி மாணவிகளிடம் அவர் வாட்ஸ்அப் மூலம் பேசிய ஸ்கிரீன் ஷாட்டுகள் வெளியானது.
இதனையடுத்து, பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பேராசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க கல்லூரியில் வளாக குறைதீர்ப்பு குழு கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த கமிட்டி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில், "பேராசிரியர் மீதான பாலியல் புகார் அளித்த மாணவர் கொடுத்த வீடியோ ஒன்றேகால் மணி நேரம் இருப்பதாகவும், புகார் அளித்த மாணவரிடம் விசாரித்த போது மூன்று மணி நேரத்திற்கும் மேல் வீடியோ இருப்பதாக தெரிவித்தார். ஆனால் முழுமையான வீடியோவை புகார் அளித்த மாணவர் கொடுக்காததால் அது குறித்து முடிவுக்கு வர முடியவில்லை.
மேலும், கல்லூரி முதல்வர் பதவிக்கான போட்டியில் பேராசிரியர் மற்றும் வேறு ஒருவர் மட்டுமே இருந்த நிலையில், இந்த போட்டியிலிருந்து பேராசிரியரை விலக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி ஆசிரியர்கள் சிலர் மாணவர்களைத் தூண்டிவிடும் விதத்தில் பேசி இருப்பதும் தெரியவந்துள்ளது".
மேலும், சம்மந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்திய போது அந்த "ஸ்கிரின் ஷாட்" தன்னுடையது அல்ல எனவும், பேராசிரியர் தனக்கு எந்த தொந்தரவும் அளிக்கவில்லை என விசாரணையில் அவர் தெரிவித்து இருப்பதாகவும், புகார் கொடுத்து தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய கல்லூரி நிர்வாகத்திற்குப் பரிந்துரைப்பதாகக் கல்லூரியில் வளாக குறைதீர்ப்பு குழு கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.