கோயம்புத்தூர்: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது உலாந்தி (டாப்சிலிப்) பகுதியாகும், இங்கு உள்ள கோழிக்கமுத்தி, எருமைபாறை, கூமாட்டி உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் வனம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எருமைப்பாறை செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் ருக்குமணி (70) என்பவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால், அவரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் உயிரிழந்தார். டாப்சிலிப்பில் உள்ள ஆம்புலன்ஸில் பழுது ஏற்பட்டுள்ளதால், மலைவாழ் மக்கள் நலன் கருதி ஆம்புலன்சை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என இங்குள்ள மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வரவில்லை; கர்ப்பிணியை தோளில் சுமந்துச் சென்ற உறவினர்கள்!