கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் கடந்த முன்று நாள்களுக்கு முன்பு உட்பிரையர் நிறுவனத்திற்குச் சொந்தமான சவராங்காடு எஸ்டேட்டில் உள்ள பெண் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், வால்பாறை மருத்துவக் குழு, வருவாய்துறை, காவல்துறை உயர் அலுவலர்கள் அந்தப் பெண்ணை நேற்று (ஏப்ரல் 21) நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதி முழுமையாக சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண் தங்கியிருந்த வால்பாறை காந்திநகர் குடியிருப்புப் பகுதியை துணை ஆட்சியர் வைத்திநாதன், காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன், நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், வால்பாறை வட்டாட்சியர் ராஜன் ஆகியோர் இன்று நேரில் சென்று அப்பகுதியை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து வால்பாறை பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் அதிமுக தொழிற்சங்கத் தலைவர் வால்பாறை வீ. அமீது, நகர கழகச்செயலாளர் மயில் கணேசன், வாசு இவர்களுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் வால்பாறை பகுதியில் மக்கள் கூட்டத்தை குறைப்பதற்கான வழிகள், கடைகள் திறப்பது, நேர கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து பேசப்பட்டது. வால்பாறையில் அனைத்துக் கடைகளும் இரண்டு நாள்கள் மூடப்பட்டு நேற்று திறந்ததால் மக்கள் நெரிசல் அதிகம் ஏற்பட்டது. இதனால் நோய்த்தொற்று அச்சத்தில் மக்கள் பொருள்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க... சிறுத்தையின் மரணத்தில் சந்தேகம்; வனத்துறை விசாரணை