கோயம்புத்தூர்: தனியார் பள்ளி மாணவி ஒருவர், ஆசிரியரின் பாலியல் தொல்லையால் (நவ. 11) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
விசாரணையில், அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியரின் தொடர் பாலியல் துன்புறுத்தலே தங்களது மகளின் தற்கொலைக்குக் காரணம் என மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இத்துடன் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிவைத்த கடிதத்தில் மூவரின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆசிரியர் கைது
மேலும், அந்த ஆசிரியர் அந்த மாணவிக்கு, தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாகியதாகவும், இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும்கூட அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து (நவ. 12) அந்த ஆசிரியர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ சட்டத்தில் இரண்டு பிரிவுகள் என மொத்தம் மூன்று பிரிவுகளின்கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.
முதல்வருக்கு நீதிமன்றக் காவல்
இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தனியார் பள்ளியின் முதல்வர் மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை தனிப்படை காவல் துறையினர் நவ. 14ஆம் தேதி பெங்களூருவில் கைதுசெய்தனர்.

முதல்வர் கைதுசெய்யப்பட்ட நிலையில், மாணவியின் உடலை அவரது பெற்றோர் உடற்கூராய்வு நிறைவடைந்த பின் நவ. 14 ஆம் தேதி பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து, கோவை மகளிர் நீதிமன்றம் நீதிபதி முன்பு பள்ளி முதல்வர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில், அவர் கோவை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார்.
சோதனை
இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் இல்லம், மாணவி முன்பு படித்த தனியார் பள்ளி முதல்வரின் அறை, இயற்பியல் ஆசிரியரின் இல்லம், மாணவியின் நண்பர் இல்லம் ஆகிய நான்கு இடங்களில் தனிப்படை காவல் துறையினர் நேற்று (நவ. 16) சோதனை செய்தனர்.

இதில், மாணவியின் இல்லத்தில் இருந்து இரண்டு செல்போன்கள், ஒரு மடிக்கணினி, சில நோட்டு புத்தகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; 3 பேர் கைது, ஒருவருக்கு வலைவீச்சு!