சென்னை: ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து 'அனைத்து மாணவர் கூட்டமைப்பு' சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தபால் நிலையத்தில் திமுக மாணவர் அணியினரும், மாணவர் கூட்டமைப்பினரும் முற்றுகையிடும் போராட்டத்தை இன்று (பிப்ரவரி 25) நடத்தினர்.
இந்த போராட்டத்தில் ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியை விடுவிக்க வேண்டியும் முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பவள விழா வளைவில் இருந்து, பேரணியாக பஜார் சாலை வழியாக தபால் நிலையத்தை சென்றடைந்த போராட்டகாரர்கள், அங்கு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து பேசிய தென் சென்னை தி.மு.க மாணவர் அணி தலைவர் அருண், “தேசிய கல்விக் கொள்கை எனும் பெயரில் ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கிறது. அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியினை ஒன்றிய அரசு உடனடியாக தர வேண்டும். இந்தி திணிப்பை ஏற்கனவே எதிர்த்தது போல, நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கை தான் அவசியம்,” என தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய புரட்சிகர மாணவர் அமைப்பின் மணிகண்டன், “மோடி அரசு தொடர்ந்து இந்தி திணிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதனை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெறும். இந்தப் போராட்டம் முதல் கட்டம் தான், அடுத்த கட்டமாக தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்,” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவை அறிவாலயத்தில் அடகு வைத்துவிட்டன"- பாஜக ராம சீனிவாசன் காட்டம்!
அதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக, மதிமுக, விசிக, எஸ்எப்ஐ உள்ளிட்ட பல்வேறு மாணவர் இயக்கங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கள் கைகளில் கெட் அவுட் மோடி, ஹிந்தி தெரியாது போடா, பிரிங் பேக் எஜுகேஷன் டு ஸ்டேட் லிஸ்ட், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், எஜுகேஷன் இஸ் ஸ்டேட் ரைட் என்பது போன்ற பல்வேறு விதமான பதாகைகளை கைகளில் ஏந்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, ‘தமிழ் மொழியாம் செம்மொழி’ பாடலுக்கு மூன்று மாணவியர் பரத நாட்டியம் ஆடினர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் போராட்டத்தை முன்னிட்டு கும்பகோணம் தலைமை அஞ்சலக வளாகத்தின் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.