தஞ்சாவூர்: தஞ்சையில் லாரி உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டருக்கு கும்பகோணம் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பள்ளியக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (41). லாரி உரிமையாளரான இவர் லாரிகள் மூலம் செங்கல், மணல் ஏற்றி சென்று விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (68). இவர் தஞ்சை மாவட்டம் மெலட்டூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், ரமேஷ் பாபு கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி இரவு முதல் 16ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை வெண்ணாற்றங்கரையிலிருந்து லாரியில் மணல் ஏற்றி வந்துள்ளார். இந்த லாரியை அப்போதைய மெலட்டூர் சப் இன்ஸ்பெக்டர் சுகுமார் பறிமுதல் செய்ததுடன் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் பாபுவை கைது செய்தார்.
இந்த வழக்கில் லாரியில் இருந்த 4 சுமை தூக்கும் தொழிலாளர்களை குற்றவாளிகளாக சேர்க்காமல் இருப்பதற்காக ரமேஷ் பாபுவிடம் சுகுமார் ரூ.8,000 லஞ்சம் கேட்டுள்ளார். அந்த பணத்தை மெலட்டூர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் கொடுத்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழு அமைக்கப்பட்டுள்ளதா? - அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ் பாபு, இது தொடர்பாக தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவப்பட்ட பணத்தை சம்பந்தப்பட்ட பெட்டிக்கடையில் ரமேஷ் பாபு கொடுத்தார். இந்த பணத்தை சுகுமார் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது குறித்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் நீதிபதி சண்முகப் பிரியா நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அப்போது சுகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பரசன், மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, சிறப்பு இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் நடத்தினர். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் முகமது இஸ்மாயில் ஆஜரானார்.