கோயம்புத்தூர்: மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நேற்று (ஜூலை 19) ஈரோடு மாவட்டம் தாளவாடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் சென்னை செல்வதற்காக அன்னூர் வழியாக கோயம்புத்தூர் விமான நிலையம் சென்றார்.
இதனிடையே அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், கழிப்பிடம் , பொது இடங்கள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நோயாளிகளிடம் மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்த பின், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களை சந்தித்து பேசினார்.
அப்போது அன்னூர் அரசு மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்துவது, மருத்துவர்கள் பற்றாக்குறை, மருத்துவமனை வளாகத்தில் சிசிடிவி கேமரா வசதி, இரவு நேர காவலர்கள் பணியமர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் ஆய்வு