கோவை: கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட சாய்பாபா காலனி 69வது வார்டில் உள்ள பூங்காவை சீர்படுத்தி சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய இறகுப் பந்தாட்ட மைதானம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அங்கன்வாடி மையங்கள் பூங்காக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதிகளவில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி செலவிடப்பட்டு வருகிறது. அரசு நகர்புறங்களில் கட்டிடங்கள் கட்டுவதை ஊக்குவிப்பதை விட பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
மதுபானம் குறித்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் குறித்து பேசியவர் இது எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை, ஒரு பக்கம் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பதாக கூறிவிட்டு திருமண மண்டபங்களில், வீடுகளில், விளையாட்டு மைதானங்களில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மது அருந்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது மது குடிப்பதை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது என குற்றம் சாட்டினார்.
இதற்கு டோர் டெலிவரி செய்யலாம் என காட்டமாக தெரிவித்த அவர் இது ஏமாற்று விஷயம் என்றார். மேலும், இது ஒரு சமூக சீரழிவை ஏற்படுத்தும் என்றும், மக்களை சீரழிவை நோக்கி இழுத்து செல்லும் முயற்சியை அரசு செய்து வருகிறது என்றும் சாடினார். மேலும், இந்த விதிவிலக்கு மற்றும் சட்டத் திருத்தம் என்பதை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டுமென்றார், மேலும், இதனை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கமாட்டோம் என்றார்.
மதுக்கொள்கையில் இந்த அரசு நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாக செய்வதாக குற்றம்சாட்டினார். நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜகவினர் ஆளுநரை சந்தித்துள்ளதாகவும், ஆளுநர் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வார் என நம்புவதாகவும், உண்மை தன்மையை மாநில அரசே நிரூபிக்க வேண்டும் என்றார்.
எந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சந்தேகம் எழுகிறதோ அவர்கள் மீது சட்ட ரீதியான ஏஜென்சிகள் சோதனை செய்வது என்பது இயல்பு தான் என்றும், குறிப்பிட்ட நிறுவனங்கள் என்று இல்லை எனவும், தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வரி எய்ப்பு செய்துள்ளதாக சோதனை நடத்தபடுகிறது என்றும் கூறினார். அதற்கான விளக்கத்தை கொடுத்தால் சோதனை முடிவுறும் என்றார். இதற்காக அரசியல் கட்சியினர் நடத்தும் நிறுவனங்கள் மீது ரைடு நடத்த கூடாது என்பதை எதிர்பார்க்க முடியாது எனவும் கூறினார்.