கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில், கோயம்புத்தூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்க தலைவர் ஜேம்ஸ், தொழில் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை கோயம்புத்தூர் மாவட்டம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மூலப்பொருள்கள் விலையேற்றம் என்பது கடுமையாக உள்ளது. அதன்படி ஸ்டீல் 25%, காப்பர் 25%, அலுமினியம் 17%, என எவ்வித முகாந்தரமும் இல்லாமல் 20%-40% வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் தொழில்துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உதிரி பாகங்களைத் தயாரிக்கும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் இந்த விலை உயர்வினால் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளன.
மத்திய அரசு தொழிற்துறை அத்தியாவசிய பொருள்களின் விலையை கட்டுப்படுத்த ஒரு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும். விவசாயத்தில் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்திருப்பதை போல தொழிற்துறையிலும் விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.
அந்த விலை நிர்ணயம் ஒரு வருடத்திற்காவது இருக்கும் படி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசாங்கமே மூலப்பொருள்களை இறக்குமதி செய்து மாநில அரசின் மாநில கழகம் மூலம் முறையாக வழங்கிட ஆவணம் செய்ய வேண்டும்.
ஸ்டீல், காப்பர் போன்ற பொருள்களுக்கு கூடுதல் வரியை முற்றிலுமாக நீக்கிட வேண்டும். சிறு குறு தொழிற் நிறுவனங்களுக்கு குறைந்த காலத்திற்காவது 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை விதித்தால் நெருக்கடியில் இருந்து மீண்டு வர உதவியாக இருக்கும்.
இதுபோன்ற கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 15ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம் என்று தெரிவித்தார்.